Your Ad Here

உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து உதவி கமிஷனர் பதில் - சிவாஜி சிலையை மெரீனா கடற்கரைக்கு மாற்றலாம்:


     சென்னை : சென்னை, கடற்கரை சாலையின் நடுவில் உள்ள, நடிகர் சிவாஜி சிலை, வாகன ஓட்டிகளுக்கு பார்வையை மறைப்பதாக உள்ளது; எனவே, மெரீனா கடற்கரையில், மற்ற சிலைகள் இருக்கும் இடத்தில், சிவாஜி சிலையையும் மாற்றலாம் என, போக்குவரத்து உதவி கமிஷனர், மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு, சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில், பி.என்.சீனிவாசன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், சென்னை, கடற்கரை சாலை, போக்குவரத்து நெரிசல் மிக்கது. காந்தி சிலைக்கு எதிரில், நடிகர் சிவாஜிக்கு சிலை அமைப்பதாக, அரசு தெரிவித்துள்ளது. சாலையின் நடுவில், சிலை அமைக்க, தடை விதிக்க வேண்டும். சிலை அமைக்க, வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. இம்மனு, 2006ல், தாக்கல் செய்யப்பட்டது. சிலை வைக்க தடை ஏதும் இல்லாததால், காமராஜர் சாலையில், காந்தி சிலை எதிரில், சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டது. அப்போது, முதல்வராக இருந்த, கருணாநிதி, சிலையை திறந்து வைத்தார்.கடந்த மாதம், இம்மனு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையில், மனுத் தாக்கல் செய்த, பி.என்.சீனிவாசன், சில மாதங்களுக்கு முன், மரணமடைந்தார். அவருக்கு பதில், பி.நாகராஜன் என்பவர், மனுத் தாக்கல் செய்தார். "சிவாஜி சிலையை, அங்கிருந்து அகற்றிவிட்டு, வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என, கோரப்பட்டது.

மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஆர்.காந்தி, சாலையின் நடுவில், சிலை நிறுவ முடியாது. அவ்வாறு, சிலை அமைக்க அனுமதித்தாலும் கூட, தற்போது நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலை, ராதாகிருஷ்ணன் சாலைக்கு செல்ல விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு, பார்வையை மறைப்பதாக உள்ளது," என்றார்.

இதையடுத்து, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், மனுத் தாக்கல் செய்யும்படி, தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. இம்மனு, நேற்று, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

போக்குவரத்து, போலீஸ் உதவி கமிஷனர், தாக்கல் செய்த மனு: சிவாஜி சிலை நிறுவப்பட்டதால், காமராஜர் சாலையில் இருந்து, ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலது புறமாக திரும்பும், வாகன ஓட்டிகளுக்கு, பார்வை மறைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து, சாந்தோம் நெடுஞ்சாலைக்கு செல்ல, வலது புறமாக திரும்பும் வாகன ஓட்டிகளுக்கும், பார்வை மறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.இரவு நேரத்தில், 11:00 மணிக்குப் பின், போக்குவரத்து போலீஸ் இல்லாமல், சிக்னல் தானாக இயங்கும். இதனால், சிக்னலை மீறி செல்லும் மனப்பான்மை, வாகன ஓட்டிகளுக்கு இருக்கும். சிலை மறைப்பால், இந்த சந்திப்பில், பல விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டில், 12 விபத்துகளும், இந்த ஆண்டில், இதுவரை, எட்டு விபத்துகளும் நடந்துள்ளன.எனவே, சிவாஜி சிலையை அகற்றினால், காமராஜர் சாலையில் வரும், வாகன ஓட்டிகளுக்கு, வலது புறம் திரும்ப, அதிக இடம் கிடைக்கும். சிவாஜியின் மீது, எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. சிவாஜி சிலையை, மெரீனா கடற்கரையின் முன்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள, மற்ற சிலைகளுடன், வைக்கலாம். அதனால், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவர், கே.சந்திரசேகரன் சார்பில், வழக்கறிஞர், எஸ்.பிரபாகரன், சிவாஜி சிலையை, அங்கிருந்து அகற்றக் கூடாது. ஆட்சியாளர்கள், அட்வகேட் ஜெனரல்கள் மாறலாம்; ஆனால், போலீசார் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும். "போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என, இதே போலீசார் அளித்த அறிக்கையை தான், அன்றைய அட்வகேட் ஜெனரல் கூறினார். இது, மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம். ரசிகர்கள் பலர், தற்கொலைக்கும் முயன்றுள்ளனர். ஏற்கனவே, இதே பிரச்னையை, சுப்ரீம் கோர்ட் ஆராய்ந்துள்ளது," என்றார்.

இவ்வழக்கில், சிவாஜி சமூகநலப் பேரவையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அவகாசம் வேண்டும் என்றும் கோரப்பட்டதை தொடர்ந்து, விசாரணையை, டிச., 13ம் தேதிக்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்