தொடர் தோல்விகளுக்கு பிறகு, கார்த்தி மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ”மெட்ராஸ்”. ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி-கத்ரீனா தெரஸா நடித்துள்ள மெட்ராஸ் படம், வடசென்னையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது.
தற்போது இந்தப்படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், ”மெட்ராஸ்” படத்திற்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாலசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான், ”கருப்பர்கள் நகரம்” என்ற படத்தை எடுத்து வருகிறேன். இப்படம் பாதி முடிவடைந்துள்ளது. இதனிடையே கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் படத்தின் கதை எனது கதையை போன்று உள்ளது. எனது கதையை திருடி மெட்ராஸ் படத்தை எடுத்துள்ளனர்.
எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், அக்டோபர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நோட்டீஸ்அனுப்பி, வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்தப்படத்தின் மூலமாவது ஒரு வெற்றியை தக்க வைத்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்த கார்த்திக்கு, படம் ரிலீஸாகும் முன்பே ஏற்பட்டு இருக்கும் சிக்கல் கவலையை அளித்துள்ளது.