Your Ad Here

வன்முறை, ஆபாசமற்ற திரைப்படங்களையே எடுங்கள் : ஜெயலலிதா

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை சென்னையில் ஆரம்பித்து வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா .

திரைப்படங்களில் வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிளைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அங்கு அவர் ஆற்றிய உரையில் மேலும்

மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப் படைப்பு சினிமா. சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இசை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், நாடகம் என பல கலைகள் மக்களின் மனதை மகிழ்விக்கவும், வளப்படுத்தவும், பலப்படுத்தவும் பயன்பட்டன.

இந்தக் கலைகளோடு அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் நவீன அறிவியல் யுக்திகளும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தான், வேறு எந்த கலை வடிவத்தையும் விட எளிதாக மக்களை ஈர்க்கும் வலிமை திரைப்படத்துக்கு இருக்கிறது.

நான் முதல்வராக பொறுப்பேற்கும் போதெல்லாம் திரைப்படத் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளித்திருக்கிறேன். குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அந்தத் திரைப்படத்துக்கான மானியத் தொகை உயர்த்தப்பட்டது. அதனால் சிறு முதலீட்டுப் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. சுதந்திரமாகச் செயல்படும் திரைப்படத் துறை: தயாரிப்பாளர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில், ஒற்றைச் சாளர முறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் விருது தோற்றுவிக்கப்பட்டது. திரைப்படத் தொழிலாளர்கள் பணிபுரியும்போது உயிரிழந்தாலோ, ஊனமுற்றாலோ, அவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

பெண்களை உயர்வாக சித்திரிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு அரசு விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக திருட்டு வீடியோக்கள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், காணொலித் திருட்டுத் தடுப்புப் பிரிவு எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. திருட்டு விடியோ தொழிலில் ஈடுபட்டு குற்றம் இழைப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்தது என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் என் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.

இளைய தலைமுறையிடம்... திரைப்படம் என்பது பல்வேறு கலைஞர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும் நல்ல கருத்துகளை, முற்போக்கு சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், ஜாதி மற்றும் மத ரீதியிலான வகையில் பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும், வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்தும் படங்களை எடுக்க வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மேலும், திரைப்படத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்றும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்