காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி நடிகர் கருணாஸ் வீட்டு முன் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்ல வற்புறுத்தினார்கள். கருணாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டபடி முற்றுகையில் ஈடுபட்டார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்து திருமங்கலத்தில் உள்ள சமூகநல கூடத்தில் வைத்தனர். அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேரில் போய் பார்த்தார்.